ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
