மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது.
இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.
“பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.
குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

