முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன விடுமுறையில் இருந்ததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
2009 மார்ச் 31 முதல் 2013 டிசம்பர் 12, வரை தனியார் வங்கிகளில் மூன்று நிலையான வைப்பு கணக்குகளில் சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் ரூ. 59 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வைப்பு செய்ததன் மூலம் பிரதிவாதிகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறி, மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

