சட்டவிரோதமான முறையில் அதன் அசல் வடிவத்தை மாற்றி அமைக்கப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக சத்தத்துடன், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் குறித்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் ஹோமாகமவைச் சுற்றியுள்ள பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, சைலன்சர்களின் சத்தம் மாற்றப்பட்ட, பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Side Mirrors) இல்லாத, சேற்றுக்காப்பான்கள் (Mudguards) இல்லாத, இலக்கத் தகடுகள் இல்லாத மற்றும் முகப்பு விளக்குகளின் வடிவங்கள் மாற்றப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் பரிசோதகரிடம் (RMV) சமர்ப்பிப்பதற்காகப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

