கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த இரவு தபால் தொடருந்து சேனரத்கம தொடருந்து நிலையத்தில் தடம்புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு (24) இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து வடக்கு வழித்தடத்தில் இயங்கும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்தின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகியதால் வடக்கிற்கான தொருந்து சேவைகளில் இடையூறுகள் ஏற்பட்டதாக அந்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவை
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் இரவு தபால் தொடருந்து மறு அறிவிப்பு வரும் வரை அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த தொடருந்தை மீண்டும் தடத்தில் ஏற்றும் பணிகளுக்கு உதவுவதற்காக, தடம் புரண்ட இடத்திற்கு ஒரு மாற்றுத் தொடருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வெகுவிரைவில் வழமையான தொடர்ருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடரும் வரை, வடக்கு வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் தாமதங்களையும் சேவை மாற்றங்களையும் எதிர்பார்க்குமாறு தொடருந்து திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

