உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயம் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்த விடயத்தை திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு
கேள்வி எழுப்பிய கொழும்பு கோட்டை நீதவான் – அதிகாரிகள் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை ஏன் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை?
திலீப பீரிஸ் – இந்த வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கர்னல் மத்துமகே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த சட்ட நடவடிக்கை நிறைவடைந்ததும் சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்த பெர்னாண்டோ, தனது தரப்பை சேர்ந்த நபரின் மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், ‘B’ அறிக்கைகள் மூலம் எந்தவொரு ஆதாரமற்ற விடயத்தையும் முன்வைக்க முடியும் என்பதால், அவற்றுக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதன்போது காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

