கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட ஒழுங்கையில் அமைந்த மோட்டார் சைக்கிள் திருத்துகம் ஒன்றில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளரின் நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனினும், துப்பாக்கிதாரிகளின் இலக்கு மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று இரவு 9.40 மணியளவில் கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட ஒழுங்கையில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்துகத்திற்குள் இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஹுளுதாகொட ஒழுங்கைக்குத் திரும்பி குறித்த மோட்டார் சைக்கிள் திருத்தகத்தை நோக்கிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளன.
அதன்பின்னர், அவர்கள் மோட்டார் சைக்கிள் திருத்தகத்திற்கு அருகில் வந்து, அதில் துப்பாக்கிதாரி மட்டும் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி வீட்டைக் கொண்ட நிலப்பரப்பிற்குள் செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
அங்குச் சென்ற துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் திருத்தகத்திற்கு அருகில் நின்றிருந்த நபர் ஒருவரைக் குறிவைத்து ரிவோல்வர் ரகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் துப்பாக்கிதாரி தான் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்
இவ்வாறு உயிரிழந்தவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபராவார்.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு உடனடியாக வருகை தந்த கல்கிஸ்ஸ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நேற்று (15) இரவே விசாரணைகளைத் தொடங்கினர்.
அதற்கமைய, மோட்டார் சைக்கிள் திருத்தகத்தின் உரிமையாளர் மற்றும் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளரின் தாய் இன்று (16) காலை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு வந்தார். நேற்று இரவில் இடம்பெற்ற பெல்லன்வில ஊர்வலத்தைப் பார்த்த பின்னரே அவர் அங்கு வந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தனது மகனின் நண்பர் என்றும், அவர் அடிக்கடி அங்கு வந்து போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவருக்குச் சொந்தமானது எனக் கருதப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், பொலிஸார் நடத்திய விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் துப்பாக்கிதாரிகளின் உண்மையான இலக்கு அல்ல என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் திருத்தகத்தின் உரிமையாளரான ‘சதுன்’ என்பவரைக் கொலை செய்யவே துப்பாக்கிதாரிகள் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் தெரிவித்துள்ள தகவலின்படி, அவர் ‘ID’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இப்பகுதியில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளரான சதுன் என்பவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இரத்மலானையில் ‘குடு அஞ்சு’வின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேல் விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

