அஸ்வெசும பணத்தினை பெற இரத்தினபுரிக்கு சென்ற 21 வயது யுவதியொருவர், நேற்று காலை நீரில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வெவல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த யுவதி அணிந்திருந்த ஆடைகள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்டுள்ளதுடன், அவரது கால்சட்டை பையில் 11,000 ரூபா பணம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டெமோதர ஆற்றிலிருந்து வெவல்வத்திலுள்ள பனகொட சிறிய நீர் மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயின் அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை மணி நேரம் உடல் அடையாளம் காணப்படவில்லை எனவும், பின்னர் இறந்த யுவதியின் பெற்றோர் தங்கள் மகள் என அடையாளம் கண்டுள்ளனர்.
மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண், ரத்தினபுரி, ஹபுகஸ்தென்ன, கல்லெல்ல, பஹலகெல்ல பகுதியைச் சேர்ந்த முத்தையா பேபி ஷர்மி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வங்கியில் அஸ்வெசும நிதி உதவி பெறுவதற்காக கடந்த 15 ஆம் திகதி காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து இரத்தினபுரி நகரத்திற்கு புறப்பட்டார். அவரைத் தேடியபோது, நீரில் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யுவதி கொலை செய்யப்பட்டாரா என்பதை அறிய இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வெவெல்வத்த பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

