யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி, பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருந்த புதுமுக மாணவனை சில சிரேஸ்ட மாணவர்கள் வழிமறித்து, வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனியார் மாணவ விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவருடன் சேர்ந்து வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். தாக்குதலின்போது, மாணவரை தலைக்கவசத்தால் தாக்கியதும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலால், நாத்தாண்டி பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிரேஸ்ட மாணவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற மாணவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தலைமறைவாக உள்ள மாணவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.