வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam) இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் அரசப் பயணம், இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
மேலும் இது நீண்டகால அரசியல் நம்பிக்கையை ஆழப்படுத்தி, இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக, தெற்காசியாவில் உள்ள வியட்நாம் செய்தி நிறுவனத்தின் (VNA) செய்தியாளருக்கு அளித்த செவ்வியின் போதே அமைச்சர் விஜித்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதன்போது இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு மத்தியில் இரு நாடுகளின் நீண்டகால நட்புறவையும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் இந்தப் பயணம் பிரதிபலிக்கின்றது.
வரலாற்று அடித்தளங்கள், கலாச்சார ஒற்றுமைகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்கள் ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட வியட்நாமுடனான தனது நீண்டகால உறவுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
வியட்நாமின் வரலாற்றில் ஒரு கடினமான காலகட்டத்தில், 1970-ஆம் ஆண்டில் இலங்கை வியட்நாமை அங்கீகரித்ததிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடங்கின.
இதன் மூலம் அந்தத் தென்கிழக்கு ஆசிய நாட்டுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது.
சில சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை வியட்நாமுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, காலனித்துவம் மற்றும் வெளித் தலையீடுகளுக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டைப் பேணி வந்தது.
இந்த ஆரம்பகால ஒற்றுமையே இன்றைய நெருங்கிய உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்தது.
குறிப்பாக ஆழமான கலாச்சாரப் பிணைப்புகள், குறிப்பாகப் பகிரப்பட்ட பௌத்தப் பாரம்பரியம், அத்துடன் மக்களுக்கிடையேயான நீண்டகாலப் புரிதல் என்பவை இவற்றில் அடங்கும்.
இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் உயர்மட்டப் பரிமாற்றங்கள் மையப் பங்கு வகித்துள்ளன.
தூதரக உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட வியட்நாம் அரசுமுறைப் பயணம் உள்ளிட்ட அண்மைய மைல்கற்கள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பொருளாதாரத்தை பொருத்த வரையில் இரு தரப்பினரும் முன்னேற்றம் கண்டுள்ளனர், ஆனாலும் இருவழி வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இன்னும் பயன்படுத்தப்படாத குறிப்பிடத்தக்க ஆற்றல் உள்ளது.

