யாழ்ப்பாணம் – வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீசேட்டின் ஒரு பகுதி கொல்லப்பட்டவரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேகநபர்கள் செல்லும் காட்சியும் அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.

