மன்னாரில் இரண்டாம் கட்டமாக, நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மன்னார் பஜார் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
குறிப்பாக காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாங்களை ஏற்றிவந்த வாகனங்களுக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் வாகனம் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

