பதுளை பகுதியில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை பயன்படுத்துவோரை இலக்கு வைத்து வங்கி கணக்குகளில் இருந்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பதுளை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவர், தொலைபேசி அழைப்பின் மூலம் இவ்வாறான மோசடியின் பேரில் பெரும் தொகை பணத்தை இழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை, ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பரிசளிப்புக்கு தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை நம்பி, தனது வங்கி கணக்கிலக்கத்தையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.
தகவலை வழங்கிய சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 50,000 பரிமாறப்பட்டதாக தொலைபேசி குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
பதுளை பகுதியில், குறிப்பாக ஆசிரிகளை இலக்கு வைத்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பண்டிகை காலங்களில் இத்தகைய மோசடிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.