தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை சரிசெய்யாதுவிடின், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பமும் இருக்காது என யாழ் பல்கலைக் கழக அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுப்பேருரையாற்றும்போதே போதே பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிறுத்தியவர்கள் பொதுமக்களல்லர், எதிரிகளல்லர், விரோதிகளல்லர் கட்சிக்குள் இருந்தவர்களே நீதி மன்றத்தில் கொண்டு சென்று நிறுத்தினார்கள்.
கட்சிக்குள் இருந்து முரண்பாடுகளையும், பகைமைகளையும், அவாக்களையும் கொண்டிருந்தவர்களும், தங்கள் நலன்கள் சாத்தியப்படவில்லை என்ற எண்ணங்களைக் கொண்டவர்களும்தான் இதற்குக் காரணமானவர்கள்.