அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ம் திகதி தாம் ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் ஆலோசகர் பதவிக்கோ அல்லது வேறு அரச பொறுப்புக்களையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வேலையில்லா பட்டதாரி கிடையாது என்பதனால் அரசாங்கத்திடம் பதவி ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது தொழில் அனுபவங்களை ஒன்று திரட்டி நூல் ஒன்றை எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்களில் முக்கிய பொறுப்புக்களை வகித்த தாம் எதிர்வரும் நாட்களில் ஓய்வாக இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்திற்கு தமது வாழ்த்துக்களைக் கூறியதாகவும், அவர் சிறந்த ஓர் அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனைச் செய்யத் தயார் என பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

