முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ‘மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி’ என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்ற ஒரு சிறப்பு சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது
சிறிசேனா இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிறபிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னரான விசாரணைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகக் கடுமையான கேள்விகளை இன்றும் மைத்திரிபால மீது எழுப்பப்படுகின்றன.
அந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததுடன், அவர்களைப் பாதுகாப்பதில் அரசின் பொறுப்பு என்னவாக இருந்தது? அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை என்ன என்பதும் அவரிடம் இருந்து தேடும் பதிலுக்கான கேள்வி ஆகும்.
அன்று அவர் குடும்பத்தோடு கொண்டாட்டத்திற்க்காக சிங்கப்பூருக்கு பறந்தார். ஒரு நாட்டின் சாதாரண அமைச்சர் கூட வெளிநாட்டுக்கு சென்றால், அதற்கான அவர் வகிக்கும் பதவிக்கான பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பார்.
இதுவே இலங்கை அரசியல் நியதி. இருந்தும் மைத்திரி பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பை வகித்தும் கண்டும் காணாததுமாக, பதவிக்கான பொறுப்புக்கு எவரையும் நியமிக்கது பறந்துவிட்டார். இது எங்கோ தேடிய கருத்தல்ல.
பொறுப்புக்கூறல் மற்றும் நீதி
அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஹேமசிறி பெர்னாண்டோ இருவரும் நீதிமன்றில் தெரிவித்தது. இத்தகைய பின்னணியில், அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி போன்ற கௌரவப் பட்டம் வழங்கப்படுவது இயல்பல்லவே? ஒரு ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மதிப்பிடும்போது, பொருளாதாரக் கொள்கைகள், சமூகப் பணிகள் அல்லது அரசியல் சாதனைகள் மட்டுமல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் அடிப்படைப் பொறுப்பும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
மகிந்தவை ஆட்சிக்கு வரவழைக்க ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்ட கதையெல்லாம் மைத்திரியின் அரசியல் பக்கத்தில் விமர்சனங்களின் அடுக்குகள். இவ்வாறு உயிர்த்த ஞாயிறு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பாதுகாப்புத் தோல்வி குறித்து கேள்விகள் எழுந்திருக்கும்போது, அந்தக் காலத்தின் அரசியல் தலைமைக்கு வழங்கப்படும் கௌரவம் பொதுமக்களின் மனதில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
இங்கு முக்கியமானது, மைத்திரிபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது அல்ல. மாறாக, அரசின் பொறுப்பு, அரசியல் பொறுப்பு மற்றும் ஒழுக்கப் பொறுப்பு ஆகியவை எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன? என்பதே கேள்வி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பாகவும் பல ஆண்டுகளாக கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் முழுமையான உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சூழலில், முன்னாள் அரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் உயரிய கௌரவத்தை வழங்குவது உணர்வுபூர்வமான முரண்பாடே…

