யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் , கந்தர்மடம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) எனும் மாணவனே திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் .
பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த மாணவன்
குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும் போது, பரீட்சை மண்டபத்தில் மயக்கமடைந்த நிலையில் , அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் 12 ஆம் திகதி சுகயீனம் ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு இருந்தவேளை திடீரென வலிப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

