இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது:
அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி
10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது.
அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகளும் கடந்த 10 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதன்படி, 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பொன்னி அரிசியின் மொத்த விலை 245 ரூபாவாகவும், 240 ரூபாவாக இருந்த வெள்ளை பொன்னி அரிசி ஒரு கிலோகிராமின் மொத்த விலை இன்று 265 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

