கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக, தேடப்பட்டு வரும் மூன்று சீன நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த 2026.07.23 அன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேகத்துக்கிடமான மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக் கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களின் ஆதரவைப் பொலிசார் கோரியுள்ளதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு – 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிசார், பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.

