யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட இருபாலையில், வீடொன்றில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து, அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கைதான சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்டினேற்றர்கள், மின் டெட்டினேற்றர்கள், யூரியா, யூரியாவை வெடிமருந்தாக மாற்றும் ஜெல், கொண்கிறீட் உடைக்கும் உபகரணங்கள் என்பன அவற்றில் அடங்குகின்றன.
இந்நிலையில் பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களும் புதையல் தோண்டும் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஏழு பேரும் விசாரணைகளின் பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைகப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.