சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து நேற்றைய தினம் இரவு 07.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துடன், சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிந்து 30,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 150 சிகரட்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 13 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.