கொழும்பு- கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இரண்டு இளைஞர்கள் சோதனை என்ற பெயரில் மோசமான முறையில் நடத்தப்பட்டமை குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பொறுப்புக்கூறுதல் நீதியை உறுதிப்படுத்துவதற்காக குற்றவாளிகள் என இனம் காணப்படுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட அரஜாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார்.
இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மறித்துள்ளனர் இதன்போது பொலிஸார் மகனை கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள் அவரது உடமைகளை வீசி எறிந்தார்கள் என தந்தை ஜெரால்ட் டி சேரம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏன் தாங்கள் மீது சோதனையை மேற்கொள்கின்றனர் என்பதற்கான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை எனவும் தந்தை தெரிவித்துள்ளார். நான்கு பொலிஸார் தனது மகனை முழுமையாக ஆடைகளை அகற்றி சோதனையிட்டனர் அவரை தாக்கினர் என தெரிவித்துள்ள தந்தை கொழும்பின் மிகவும் மும்முரமான பகுதியில் இது இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலியபீரிஸ் சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சில பொலிஸாரினால் பொதுமக்கள் எவ்வாறு மிரட்டப்படுகின்றனர் மற்றும் மிருகத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பதற்கான சிறிய உதாரணமே இந்த சம்பவம் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ், சில பொலிஸாரின் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கே கரும்புள்ளியாக அமைகின்றன எனவும் விசனம் வெளியிட்டார்.
பொலிஸார் கட்டுப்பாடற்ற விதத்தில் கட்டுங்கடாத விதத்தில் செயற்படுவதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவென தெரிவித்துள்ள சாலியபீரிஸ், பொலிஸாரின் மிருகத்தனமான மற்றும் தண்டனையின்மை நடவடிக்கைகள் குடிமக்களின்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதோடு துரதிஸ்டவசமாக உயர்பதவிகளில் உள்ள சில உயர் அதிகாரிகளின் செயற்பாடுகள் இந்த வகையான நடத்தையை கண்டித்து ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பலரிடம் தாங்கள் பொலிஸாரிடம் எந்த அநீதிகள் குறித்த விபரங்களை வெளியிடுவதற்கான வலுவோ அல்லது வழிமுறையோ இல்லை என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ், சட்ட அமுலாக்கல் தரப்பினரின் இந்த நடவடிக்கைகைள இந்த நாட்டின் மக்கள் கேள்வி கேட்காவிட்டால் சில மனவளர்ச்சி ஊழல் நிறைந்த காவல்துறை அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையிலிருந்து எவரும் தப்ப முடியாத காலம் உருவாகும் எனவும் அவர் எச்சரித்தார்.