பெண்கள் எழுத்தில் அவர்களுக்கான ஆளுமைகள் பெருகிக் கிடக்கின்றன. அவர்களின் மணவாழ்விற்குப் பின்னரான நிலையில் அவர்கள் தமது ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது அடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பல கவிதைகள் காட்டுகின்றன.
பெண்களின் கல்யாண வாழ்க்கை சிக்கலாகும் போது அவர்கள் தனித்து ஆளுமையுடன் வாழ வேண்டியவர்கள் ஆகிறார்கள்
திருக்கல்யாணம் இருபதுக்குள்
இரு பிள்ளைப்பேறும்
ஒரு சக கழுத்தியும் முப்பதுக்குள்
திருமாங்கல்யம் கழட்டல் நாற்பதில்
அடுத்து வரவிருக்கும்
மருமக்களை எதிர்கொள்ள
கற்றுக்கொண்டு வருகிறாள் ஐம்பதில்
(இரா.மீனாட்சி, வாசனைப்புல்)
இக்கவிதையில் வயதுகள் தோறும் தம்முடைய ஆளுமைகளை வளர்த்துக் கொள்கிறாள் பெண் என்பதை உணரமுடிகின்றது.
அப்பா என்பவர் ஆளுமை மிக்கவர் என்ற கோணத்தில் எல்லாக் குடும்பங்களிலும் அவருக்குப் பல விடுதலைகள் உண்டு. அவற்றை ஏளனமாகச் சித்தரிக்கிறது பார்வதி பாமாவின் கவிதை
அப்பாவாக இருந்தால்
தாமதமாக எழுந்துக்கலாம்
காலட்டியபடியே கோப்பி குடிக்கலாம்
அம்மாவை மிரட்டி வேலை வாங்கி
சட்டை கசங்காம கிளம்பிப் போகலாம்.
பிரண்ட்ஸோட சுத்தலாம் இஷ்டப்படி
யார் கேட்பார் அப்பாவைக் கேள்வி
அப்புறம் என்னதான் கவலை அப்பாவுக்கு
என்று கவிதை அப்பாவுக்குக் கவலை இல்லை எனக் காட்டுகிறது.இருந்தாலும் இக்கவிதை முடியவில்லை.
என்றாலும் அடிக்கடி சிடுசிடுத்து அம்மா முகத்தில்
தட்டு வீசியெறியும் அப்பாவுக்குத் தர வேண்டும்
ஆயிரம் பக்கத்துக்கு ஹோம் வெர்க்.
(க.பார்வதி பாமா, கடந்து போகாத மேகங்கள்)
என்ற நிலையில் அம்மாவின் மேல் பச்சாதாபம் ஏற்படுத்துகிறது இக்கவிதை. அப்பா என்ற ஆளுமையைத் தன் பொறுமை என்னும் குணத்தால் ஆள்கிறாள் தாய். அதனைப் பெற்ற பிள்ளைகள் உணர்ந்தபோது கூட அப்பா உணரவில்லை என்பதே இங்கு வேதனையாகும்.
பெண்ணுக்கு அனைத்து ஆளுமைகளும் உண்டு என்று ஒரு கவிதை ஏளனப்படுத்துகிறது.
என் மனைவிக்கு வீட்டில்
முழுச்சுதந்திரம்உண்டு
எல்லா உரிமைகளும் உண்டு
அவள் விருப்பங்களுக்கு முழுமதிப்பு உண்டு
என்னிடம் அனுமதி பெறுகிற எல்லாவற்றிலும்
(ராணி, உயிரின் பிரவாகம்)
என்ற கவிதையில் பெண்களின் ஆளுமை மேம்பாட்டு அளவு என்பது ஆண்களின் சட்டங்களுக்குள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
இன்னும் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களின் தற்கால நிலை குறித்து மதிப்பிடுகிறார் நிர்மலா சுரேஷ்
இன்னும் நாங்கள் சித்திரங்கள்
வரையப்படுகிற சுவர்கள்தாம்
சித்திரங்கள் அல்ல
இன்னும் நாங்கள் மஞ்சள் பூசிக் கொள்கிறவர்கள்தாம்
எங்கள் சிந்தனைக்கு ஏது சொந்த நிறம்
இன்னும் நாங்கள் மருந்துகள் மட்டுமே
மருத்துவர்கள் அல்ல
இன்னும் நாங்கள் திசைகாட்டிகள் தாம்
திசைகள் அல்ல
இன்னும் நாங்கள் வீட்டின் நிறைகுடங்கள்தாம்
நாட்டின் வரைபடங்கள் அல்ல
இன்னும் நாங்கள் நிர்ணயங்களாய் அல்ல
வெறும் நிகழ்வுகளாகவே நின்றுவிடுகிறோம்
(பாலை வனப் பௌர்ணமிகள்)
என்று பெண்களின் ஆளுமை நிலையைக் காட்டுகிறது நிர்மலா சுரேஷின் கவிதை
பெண் ஒரு துளி என்று மாலதி மைத்ரியின் கவிதை சுட்டுகிறது.
ஒரு துளிதான்
ஓடும்போது துளியல்ல நதி
ஒரு துளிதான் என்றாலும் கடல்
ஒரு துளிதான் என்றாலும் உலகு
நீரின்றி அமையாது உலகு
(மாலதி மைத்ரி,நீரின்றி அமையாது உலகு)
என்று பெண் உலகத்துளியாக விளங்குவதை இக்கவிதை காட்டுகின்றது.
சமுதாயத்தில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் எனப் பலரும் வாழ்கின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்த வாழும் வாழ்க்கை முறைமையைப் பெற்றுள்ளார்கள். குறிப்பாக ஆண்கள் முதலாம் நிலையில் பெண்கள் ஆண்களின் சார்புநிலையிலும், குழந்தைகள் இவர்கள் இருவரையும் சார்ந்த நிலையிலும் வாழ்ந்துவருகின்றனர்.