கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவை சேர்ந்த 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையே வவுனியா பொலிஸார் நேற்றைய தினம் (31-08-2023) கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண நபர் பணம் பெற்றுள்ளார்.
ஒருவரிடமிருந்து தலா 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

