வடமராட்சியில் திக்கம் கடற்கரையில் ஒருவர் உந்துருளியுடன் கடலுக்குள் விழுந்து பலியாகியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாகா நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் சுந்தரலிங்கம் பபிகாந்த் (31) என்பவரே மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் இரவு 11 மணியளவில் தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பெடுத்து தன்னுடைய நண்பனின் பிறந்தநாள் விருந்தில் நிற்பதாகவும் புட்டு அவித்து வைக்கவும் கூறி உள்ளார்.
இரவு மகன் வராமல் பார்த்திருந்த தாய் காலையில் மகனின் தொலைபேசி இயங்காததைக் கண்டு மகனைக் காணவில்லை என குறித்த நபரின் சகோதரருக்கு எடுத்து கூறியுள்ளார்.
அவர் பொலிஸ் நிலையத்தில் விசாரித்துப் பார்த்தபோது குறித்த நபர் எதுவிதத்திலும் தடுப்பில் இல்லை எனக் கண்டறிந்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் ஒருவர் குறித்த நபரின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அவரது மகன் இவ்வாறு கடற்கரையில் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே குடும்பத்தினர் தலத்திற்கு விரைந்து சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.
குறித்த நபருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
கற்கோவளத்தைச் சேர்ந்த இவர் பருத்தித்துறை, மருதங்கேணி மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் மாகா நிறுவன வேலைகளின் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார் என தெரியவருகின்றது.
நேற்று வல்வெட்டித்துறையில் உள்ள மாகா நிறுவனத்தில் விருந்து நடந்ததாக கூறப்படுகிறது. விருந்து முடிந்து திரும்பும் வேளையிலேயே உந்துருளி கடற்கரை வீதியைக் கடந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
திக்கம் சந்தியடியில் கடற்கரையில் கற்கள் நிறைந்து காணப்படுகின்ற நிலையில் கல்லில் தலை மோதிய நிலையில் மேற்படி நபர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நடுச்சாமத்தில் தனியே வந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியதால் துரதிஸ்டவசமாக மேற்படி குடும்பஸ்தர் உதவியின்றி கடற்கரையில் மரணமடைந்துள்ளார் என மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.