மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியுதீன், உபாலி சமரசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுப் பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம் தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கலந்துரையாடலில் ”மன்னாரில் மக்களின் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் இத்தகைய காற்றாலைத் திட்டங்கள் தேவையில்லை என இ வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், மன்னார் பிரஜைகள்குழுப் பிரதிநிதிகளாலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மன்னார் மக்கள் எதிரானவர்களில்லையெனவும், மன்னார்த் தீவிற்குள் குடியிருப்புக்கள் உள்ள பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கும் செயற்பாட்டையே மன்னார் மக்கள் எதிர்ப்பதாகவும் ஜனாதிபதியிடம் அவர்கள் தெளிவு படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்தகால இனவாத அரசாங்கங்கள் இத்தகைய காற்றாலை மின்உற்பத்திக் கோபுரங்களை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதிகளை வழங்கியுள்ளபோதும், கற்றாலை அமைப்பதுதொடர்பில் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்டறியப்படவில்லை எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், காற்றாலைத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன், இவ்விடயத்தில் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மன்னார் காற்றாலைத்திட்டத்தால் ஏற்படும் சிக்கல் மற்றும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த காற்றாலைத் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தி, மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த விடயம் குறித்து நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிகையில் ” நாம் மன்னார் காற்றாலைத் திட்டத்தினால் எம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கலந்துரையாடினோம், மேலும் குறித்த திட்டம் தொடர்பில் மன்னார் மக்களுக்கு முறையாக தெளிவு படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தோம்.
ஜனாதிபதியும் நாம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டார். அத்துடன் குறித்த காற்றாலை திட்டத்தினால் நாட்டுக்கு ஏற்படும் நம்மைகள் தொடர்பாகவும் எமக்கு தெளிவு படுத்தினார். எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் இல்லாத பிரதேசத்தில் குறித்த திட்டத்தை செயற்படுத்தவே தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்திவைப்பதுடன், அதற்குள் குறித்த காற்றாலைத் திட்டம்தொடர்பாக உரிய தரப்பினர் மன்னார் மக்களின் அபிப்பிராயங்களை பெறவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காற்றாலை திட்டத்தை நடைமுறை படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை இல்லாமல் செய்வதற்கு உரிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்” என ரவிகரன் தெரிவித்தார்.
அத்துடன் சில வேளைகளில் இத் திட்டம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்விடயம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்” நாம் மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் மன்னார் காற்றாலைத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். இதன்போது மன்னாரில் நடைபெறும் கனிய மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.
அத்துடன் காற்றாலை திட்டத்தின் செயற்பாடுகள் 1 மாத காலத்திற்கு நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்துள்ளார். அத்துடன் குறித்த திட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்து ஆலோசித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

