சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி அவரிடம் இருந்து ரூ 10 லட்சத்தை மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், அடையார் பொலிசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டேன்.
நான் மறுமணம் செய்து கொள்வதற்காக பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தேன். அதில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் (45) என்பவர் தன்னை பணக்கார தொழிலதிபர் என்றும், தானும் விவாகரத்து ஆனவர் என்றும் அறிமுகம் ஆனார்.
நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் பழகினோம். நான் அவருக்கு செல்போன் உள்பட விலையுயர்ந்த பல பொருட்களை பரிசாக அளித்தேன். இந்தநிலையில் தனக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டார்.
திருமணம் செய்ய போகிறார் என்ற நம்பிக்கையில் அவர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். ஆனால் அதன்பின்னர் அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன்.
எனவே என்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து மனோகரனின் செல்போன் எண்ணை பொலிசார் ஆராய்ந்ததில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்தூர் வசித்து வந்ததும், இதேபோன்று பல பெண்களை திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து மனோகரனை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.