பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவிடம் புகார் அளித்துள்ளது.நேற்று சென்னை வந்த இந்திய பிரதமர் மோடி, ஒரு சில திட்டங்களைத் தொடங்கி, இன்னும் சிலவற்றைத் திறந்தும் வைத்தார்.
மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை ஓவியா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் #GoBackModi என பதிவிட்டார்.
இந்த ட்விட்டர் பதிவுக்காக தான் ஓவியா மீது தமிழக பாஜக புகார் அளித்துள்ளது.
புகார் மனுவில், ஓவியாவின் #GoBackModi என பதிவு குறித்து விசாரணை நடத்தவும், மோடியின் வருகைக்கு முன் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு அவர் இந்த பதிவை வெளியிட்டாரா என்பதை காவல்துறை விசாரித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்க இலங்கையும் சீனாவும் ஒவியா போன்றவர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும், சில அரசியல் கட்சிகளும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்றும் பாஜகவின் மாநில செயலாளர் குற்றம் சாட்டினார்.