இந்தியாவின் கேரள கடலில் தீயினால் சிக்கி வெடித்து சிதறும் சிங்கப்பூர் கப்பல், கடலில் மூழ்குவதை தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடற்படைக்கு சொந்தமான அவசரகால சேவை கப்பலான ‘வோட்டர் லில்லி’ இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையின் கொழும்பில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, ‘வாங் ஹை 506’ என்ற சரக்கு கப்பல் அண்மையில் பயணித்தது.
சிங்கப்பூருக்கு சொந்தமான இந்த கப்பலில் 150க்கும் மேற்பட்ட கொள்கலன்களில் பலவிதமான இரசாயன பொருட்கள் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி, கேரள கடற்பகுதியான கண்ணுார் அழிக்கால் துறைமுகத்தில் இருந்து 44 கடல் மைல் தொலைவில் பயணித்தபோது, இந்த கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்றில் தீப்பிடித்தது.
பின்னர் அந்த தீ, கப்பல் முழுதும் பரவியது. இதனால், கப்பலின் தலைவர் உள்ளிட்ட 22 பேரும் கடலில் குதித்தனர்.
எனினும், அவர்களில் 18 பேர் மீட்கப்பட்டு கர்நாடகாவின் மங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடலில் மூழ்கி மாயமான நான்கு பேரை தேடும் பணி தொடர்கிறது. இந்தநிலையில் கப்பல் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இரவு பகலாக கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.