யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது .
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாதியர்கள் என கூட்டு சேவையினால் கை துண்டாடப்பட்டவருக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதுஇதேவேளை, யாழ்ப்பாணம் – கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டுடியோ ஒன்றினை செயற்படுத்தி வந்த இரு குழுக்கள் இரவு தங்கியிருந்தபோது பிறிதொரு குழுவினர் நேற்று இரவு 9.40 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது 6 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து வாள் மற்றும் கூரிய ஆயுதங்களால் வீட்டைத் தாக்கியும் குறித்த ஸ்டூடியோ அமைந்திருக்கும் பகுதியை தீமூட்டி எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கார் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏழுபேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே விசுவமடுப் பகுதியை சேர்ந்த ஒருவரின் துண்டாடப்பட்ட கையையும் குறித்த வைத்தியர் பொருத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
