உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
பூரண விசாரணை
இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.
எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.

