வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக வந்த பெண்ணொருவரிடம் தனியார் பேருந்தில் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெளிநாட்டு பெண், கொழும்பில் தனியார் பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது, சில்லறை வியாபாரி ஒருவர் அருகில் அமர்ந்து அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதனை அந்தப் பெண் அங்கிருந்த மற்ற பயணிகளிடம் தெரிவித்தபோது, பேருந்து நடத்துனர் அந்த நபரை வேறு இருக்கையில் அமரச் செய்துள்ளார்.
பின்னர், அந்த பெண் பேருந்தில் இருந்து இறங்கி கோல்ஃபேஸ் கடற்கரைக்கு சென்றபோது, குறித்த நபர் அங்கும் பின் தொடர்ந்துள்ளார். இது காரணமாக அச்சமடைந்த பெண் அங்கிருந்தவர்களிடம் உதவி கோர, அவர்கள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இந்த சம்பவங்களை அந்த வெளிநாட்டு பெண் காணொளியாக பதிவு செய்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். தனது பதிவில், இலங்கை பேருந்தில் பெற்ற மோசமான அனுபவமாக இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளார்.