பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான உணவுக்கட்டணத்தை திருத்தும் முடிவு, 2025 மே 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. இதனை மீள்பரிசீலனை செய்யும் வகையில், 2025 மே 23 ஆம் திகதி, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் மேலும் ஒரு கூட்டம் நடைபெற்றது.
இதில், 2025 ஜூன் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பணியாளர்களுக்கான உணவுக்கட்டணங்களில் பின்வரும் மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது: நிறைவேற்றுத் தர அதிகாரிகளுக்கு மாதாந்தம் ரூ. 4,000, நிறைவேற்றுத்தரம் அல்லாத அதிகாரிகளுக்கு மாதாந்தம் ரூ. 2,500
இதனுடன், பாராளுமன்ற பொதுமக்கள் உணவகத்தில் உணவைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பினர்களின் சாரதிகள், போலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரிடம் இருந்து தற்போது அறவிடப்படும் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண திருத்தம், பாராளுமன்ற பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, திறைசேரியின் பரிந்துரையின் பேரில், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
குறித்த சபைக் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து தீர்மானித்ததுடன், பாராளுமன்ற பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.