யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் நடைபெறும் காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூவும், வடக்கு மாகாண ஆளுநரும் இடையே நேற்று (27) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ஆளுநர் இந்த தகவலை வெளியிட்டார்.
இச் சந்திப்பின் போது, மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு, மக்களின் வாழ்வாதார பாதுகாப்பு, மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, போரினால் ஆவணங்கள் அழிந்துவிட்டதன் காரணமாக, மக்கள் தமது சொத்துக்களை உறுதிப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதனை மீள்பெறுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படும் எனவும், அதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வனவள மற்றும் வன உயிரி திணைக்களங்கள் கூகுள் வரைபடத்தின் அடிப்படையில் விவசாயக் காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் கவலை வெளியிட்டார்.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, இந்திய மீனவர்களால் இலங்கை வடக்கு கடற்பரப்பில் உள்ள மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், தமிழகத்துடன் உள்ள உறவுகள் மற்றும் நாடு திரும்பும் அகதிகள் தொடர்பிலான விடயங்கள் பற்றியும் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.
சந்திப்பு முடிவில், ஆளுநர் தூதுவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார். சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.