எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான உண்மையுமில்லாதவை என இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளனர்.
முதலில் அதாவுல்லாஹ் தரப்பினர் இந்த தகவலை முழுமையாக மறுத்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பரும் இது தொடர்பாக தமது தரப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நிசாம் காரியப்பர், “அதாவுல்லாஹ்வை நாங்கள் சந்தித்து, அட்டாளைச்சேனை நகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை கோரியுள்ளோம். ஆனால், மாகாண சபைத் தேர்தல் அல்லது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை,” எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறாக, தற்போதைய சூழ்நிலையிலே அதாவுல்லாஹ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இடையே மாகாண அரசியல் தொடர்பான எந்தவொரு கூட்டணியுமோ, வேட்பாளராக்கம் தொடர்பான நிலைப்பாடுகளுமோ இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.