2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசாங்கம் மக்களை ஏமாற்றி, சாக்குப்போக்குகளை கூறுவதாகக் கூறியுள்ளார். தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச, தற்போதைய அரசாங்கத்தை “பொய்யும் பாசாங்குத்தனமும்” கொண்டதாக சாடியதுடன், மின் கட்டணத்தில் 33% குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதாகவும் விமர்சித்துள்ளார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலையீட்டால் 20% குறைப்பு மட்டுமே நடந்துள்ளதாகவும், மீதமுள்ள 13% குறைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதாக ஜனாதிபதி கூறுவது சட்டவிரோதமானது என்றும், உள்ளூராட்சி சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் முட்டாள்தனமாக நடக்கிறது என்றும் விமர்சித்தார்.
2028 முதல் வெளிநாட்டுக் கடன்களை அடைக்க 5%க்கு மேல் பொருளாதார வளர்ச்சி தேவைப்படுவதாகவும், அதனை அடைய தொழிற்சாலைகள், சுற்றுலா, ஏற்றுமதி ஆகிய துறைகளை மேம்படுத்த வேண்டிய தேவை குறித்து அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அரசாங்கத்திடம் இதற்கான திட்டம் எதுவும் இல்லையென கூறினார்.
அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

