தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அந்த அனுமதி கிடைத்த பிறகு, தென் கொரியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும், பின்னர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது, தென் கொரியாவில் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைளில் கையெழுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இம்மாதம் 10 ஆம் திகதிக்குள் அவை கையெழுத்திடப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ஜூலை மாத இறுதிக்குள் E-8 விசா பிரிவின் கீழ் முதல் குழுவை தென் கொரியாவிற்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம்.
அதற்காக, அந்நாட்டின் 04 மாகாணங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையெழுத்திட நாங்கள் தயாராக உள்ளோம்.
இதன் கீழ், தென் கொரியாவில் பருவகால வேலைகளுக்காக ஆண்டொன்றிற்கு முடியுமான அளவு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அனுப்ப நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கான ஆட்சேர்ப்புக்கள் அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதுடன், தனியார் துறையினருக்கு இதற்கான ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.