இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் என்பதுடன் மற்றையவர் தலவத்துகொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆவார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்தார். இந் நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேசபந்து தென்னக்கோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.