வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர்.
வத்தளை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு காய்கறிகளை ஏற்றி வந்த, குளிரூட்டப்பட்ட லொறியொன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த லொறியின் சாரதி தேநீர் அருந்துவதற்காக பல்பொருள் அங்காடிக்கு அருகில் உள்ள ஒரு இரவு உணவகத்தின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, சந்தேக நபர் அந்த லொறியை திருடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வீதித் தடைகளை அமைத்து லொறியை நிறுத்த முயற்சித்த போதிலும், சந்தேக நபர் லொறியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். அதன்படி, பொலிஸார் லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில், சந்தேக நபர் லொறியில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் களனி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.