யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் ‘நந்தவனத்தில் ஓர் நாள்’என்னும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
நந்தவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கழக தலைவர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ்,சிவஸ்ரீ.ர்பத்மநிலோஜ சர்மா குருக்கள் ,களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேல், கழகத்தின் முக்கியஸ்தர்கள்,முதியோர் இல்ல நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொங்கல் படைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்கள்,முதியவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சிறுவர்கள் முதியவர்களை பாடல்பாடி முதியவர்களுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்தமை விசேட அம்சமாகும்.

