புனித ரமழான் நோன்பு காலம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாதத்தில் முஸ்லிம் பக்தர்களின் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் நோன்பு மாதம் மார்ச் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும், மதவழிபாடுகளிலும் பங்கேற்பதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு அறிக்கையின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழுகைகளும், மதவழிபாடுகளும் நாளாந்தம் பின்வரும் நேர அட்டவணைப்படி நிகழும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மு.ப. 3.30 முதல் மு.ப. 6.00 வரை
பி.ப 3.15 முதல் பி.ப 4.15 வரை
பி.ப 6.00 முதல் பி.ப 7.00 வரை
பி.ப 7.30 முதல் பி.ப 10.30 வரை
குறித்த காலப் பகுதியில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தங்களது சமயக் கடமைகளில் ஈடுபடும் வகையில், அவர்களது கடமை நேரங்களை ஒழுங்குபடுத்தி கொடுக்குமாறும், விசேட விடுமுறையை அங்கீகரிக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை புனித ரமழான் பெருநாளின் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக நியதிச் சட்ட சபைகள் உள்ளிட்ட அனைத்து அரச அலுவலகங்களின் தலைவர்களுக்கும் பெருநாள் முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.