நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பல்வேறு வகையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அந்த நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தகவல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மழைவீழ்ச்சி காரணமாக நதிகளான நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
நாடு முழுவதும் புயல், அதிக மழை, மண்சரிவு போன்ற சீரற்ற வானிலை மற்றும் அதன் தாக்கம் தொடர்பில் பொது மக்கள் அதிக கவனமாகவும் , பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

