இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு – கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பேரணியின் போது போராட்டக்காரர்களைத் தடுப்பதற்காக பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலையும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
பொலிஸாரின் தடைகளை மீறி மக்கள் ஆவேசமாக முன்னேறியதால் மட்டக்களப்பு நகரின் பிரதான வீதிகளில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இக் கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஸ்ரீநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூக சிவில் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

