இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீளக்கட்டியெழுப்ப 25 ஆண்டுகளும் ஆகலாம் என, ஐக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் ஆரம்பித்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை காஸாவில் இடம்பெற்றுள்ள சேத மதிப்பீடு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலிய தாக்குதலினால் காஸாவில் இடிந்து விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது, ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளில், 500 தொன்களுக்கும் அதிகமான குப்பைகள் குவிந்துள்ளன எனவும் காஸாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும் எனவும்
போர் இடம்பெற்றதனால் காஸாவிலுள்ள 15,000 ஹெக்டேயர் வளமான நிலத்தில், 232 ஹெக்டேயர் மட்டுமே மீதமுள்ளன என்றும் 98.5 சதவீதம்நிலம் தரிசாக மாறிவிட்டன எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையே நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
இஸ்ரேல் அரசின் மூத்த அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழுவும் ஹமாஸ் மூத்த தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே 2-வது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை நீடித்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதுடன் இதன்போது முக்கிய உடன்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.