“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் இலக்குகளை வலுப்படுத்துதல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர். எச். எஸ். சமரதுங்க, உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்றும் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டது.

Share.

Leave A Reply

Don`t copy text!